சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. அதன்படி, கோயிலில் திரளான பக்தர்கள் கூடி, அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்து சென்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ஆம் தேதி தேரோட்டமும், 10 ஆம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெரும் என கூறப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கபாலீஸ்வரர் கோயில். இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
குறிப்பாக, ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் இந்த பங்குனி பெருவிழா, வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா, கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, 3 ஆம் தேதி நடந்த கிராம தேவதை பூஜையில் அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். நேற்று அதிகார நந்தி எழுந்தருளும் நிகழ்வு நடந்த நிலையில், இன்று தேர் திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி நாளை 10 ஆம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும், 12 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
அதனை தொடர்ச்சியாக, வரும் 13 ஆம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, 14 ஆம் தேதி திருமுழுக்குடன் பங்குனி பெருவிழாவும் நிறைவடைகிறது.
இப்படியாக, 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகமும், காவல் துறையும் செய்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டத் திருவிழாவையொட்டி 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. திருவிழா நாட்களில் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், வாகன ஓட்டுநர்களும், பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், போக்குவரத்து காவல் துறை அறிவித்திருக்கிறது.