மேகாலயாவில் தேன்நிலவு கொண்டாடச் சென்ற ராஜா ரகுவன்ஷி என்ற வாலிபர், தனது மனைவியின் காதலன் மற்றும் அவரது கூலிப்படையினரால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மற்றொரு தேன்நிலவு கொலையிலிருந்து புது மாப்பிள்ளை ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் படவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில். சுனிலுக்கும் குஷ்பூ என்ற இளம் பெண்ணுக்கும் இருவரின் குடும்பத்தாரும் ஏற்பாடு செய்தவாறு கடந்த மே மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற மணமகள் குஷ்பூ, அவர்களது குல வழக்கத்தின்படி 9 நாட்கள் அங்கு தங்கி இருந்துவிட்டு மீண்டும் கணவருடன் தனது தாய் வீட்டுக்கு திரும்பினார்.
புது மனைவியுடன் உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமையமலை அடிவார நகரமான நைனிடாலுக்கு சென்று தேன் நிலவை கொண்டாடும் கனவில் புது மாப்பிள்ளை சுனில் திளைத்திருந்தபோது, குஷ்பூ திடீரென மாயமானார்.
சுனில் அளித்த புகாரின் பேரில் காணாமல் போன குஷ்பூவை போலீசார் தேடி வந்த வேளையில், கடந்த திங்கட்கிழமை வேறொரு வாலிபருடன் திடீரென்று காவல் நிலையத்துக்கு வந்த குஷ்பூ, ” என்னுடைய கணவருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏற்கனவே காதலித்து வந்த இவருடன் தான் இனிமேல் வாழப் போகிறேன்” என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தகவல் அறிந்து காவல் நிலையத்துக்கு வந்த சுனில், குஷ்பூவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருவரையும் மனமாற வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் “அந்த 7 நாட்கள்” திரைப்படத்தில் வரும் காட்சி போல தோன்றினாலும், “தன்னுடைய மனதை தேற்றிக்கொண்டு குஷ்புவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தது ஏன்?” என்று சுனில் பேட்டி அளித்துள்ளார்.
இப்போது குஷ்பூ, அவர் விரும்பிய காதலர் மற்றும் நான் என நாங்கள் மூன்று பேரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர்களின் காதலை நிராகரித்து விட்டு குஷ்பூ என்னுடன் தான் வாழ வேண்டும் என்று நான் வற்புறுத்தி இருந்தால், சமீபத்தில் மேகாலயாவுக்கு தேன்நிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி-க்கு ஏற்பட்ட துயரமான முடிவைத்தான் நானும் சந்திக்க நேர்ந்திருக்கும்.” என்று எதார்த்தமாக சுனில் குறிப்பிட்டிருக்கிறார்.