ஏப்ரல் 24 ஆம் தேதி (நாளை) பஞ்சாயத்து ராஜ் நாளை முன்னிட்டு பிகாரின் லோனா உத்தர் என்கிற கிராமத்தில் பேசவிருக்கிறார். நாட்டுக்கே அவர் ஆற்றவிருக்கும் இத்தகைய உரை இதற்கு முன் எப்போதும் நடந்திராதது. விவசாய நெருக்கடியின் காரணமாக நடக்கும் புலப்பெயர்வுகளை குறைப்பது எப்படி என்பதை குறித்துதான் அவரது உரை திட்டமிடப்பட்டிருந்தது.
காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு, நாளைய நிகழ்வு நடக்குமா எனத் தெரியவில்லை. நடந்தாலும் அந்த உரையில் தாக்குதல் சார்ந்த உள்ளடக்கம் இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே பிப்ரவரியில் பிகார் கூட்டத்தில் பேசினார். கடந்த மார்ச் மாதம் மொரீஷியஸுக்கு சென்று பிகாரின் தின்பண்டமான ‘மகானா’வின் பெருமையை பேசினார். இந்த வருடக் கடைசியில் பிகாரில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக தொடர்ந்து மோடியின் பாசம் பிகார் பக்கம் இருப்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் பிகாரில் வேறொரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது.
வேலையின்மை!
விவசாயம் பொய்த்துப் போகும் நிலத்தில் இளைஞர்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பாக இருந்தது ராணுவம். ஆனால் மோடி அரசாங்கம் கொண்டு வந்த அக்னிபாத் திட்டம், ராணுவ வேலைவாய்ப்பிலும் பணி நிரந்தரம் இல்லாமல் ஆக்கியது. ’நான்கு வருடங்கள் மட்டுமே வேலை, பிறகு ஊர் திரும்பிவிட வேண்டும்’ என்கிற அக்னிபாத் திட்டம் அதிகமாக பாதித்தது வேலையின்மையும் விவசாய நெருக்கடியும் நிறைந்த மத்திய மாநிலங்களில்தான். அதில் முக்கியமான மாநிலம் பிகார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டத்தை பிகார் இளைஞர்கள் முன்னெடுத்தனர். அதில் எந்த அரசியல் ஒழுங்கும் இல்லை. பேருந்துகளை கொளுத்தினார்கள். ரயில்களை கல்லால் அடித்தார்கள். அது முழுக்க முழுக்க இளைஞர்களின் சீற்றமாக அமைந்திருந்தது.
தேர்தல் நடக்கவிருக்கும் பிகாரில் களநிலவரம் இதுதான். விடைகள் இல்லாத கேள்விகளுக்கு தேசப்பற்றும் போரும்தான் எளிய பதில்கள்.
காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தான் அரசின் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பாவின் அமைப்பு ஒன்றின் பெயர் சொல்லப்படுகிறது.
’காஷ்மீர்தான் பாகிஸ்தானுடைய கழுத்தின் நரம்பு’ என பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசீம் முனிர் ஒரு வாரத்துக்கு முன் பேசியிருந்தார்.
ஏப்ரல் 19ம் தேதி, வந்தே பாரத் ரயில் ஓட்டத்தை தொடங்கி வைக்க காஷ்மீருக்கு செல்வதாக இருந்த மோடியின் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒத்திப் போடப்பட்டது.
அமெரிக்காவின் வேட்டை நாயான சவுதி அரேபியாவுக்கு மோடி சென்ற பிறகு காஷ்மீரில் தாக்குதல் நடந்திருக்கிறது. சையது உசேன் ஷா உள்ளிட்ட இஸ்லாமியரும் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக பொய்கள் பரப்பப்படுகிறது.
எல்லை தாண்டிய பயங்கரவாதங்களுக்கு பின் மதங்கள் இருப்பதில்லை, அரசுகள் மட்டுமே உண்டு.
ராணுவ வேலைக்கான உத்தரவாதம் இன்றி இருக்கும் பிகார் இளைஞர்களுக்கு, தேசப்பற்று ஊட்டும் வகையிலான ஒரு Surgical Strike நோக்கி காஷ்மீர் தாக்குதல் கொண்டு செல்லப்படலாம்.
– ராஜசங்கீதன்