சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேர்க்கடலை என்றால் அப்படி ஒரு பிரியம். அனைவருக்கும் பிடித்தமான ஒரு நொறுக்கு தீனியை சாப்பிடுவதால் நமது உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இருப்பினும், அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது அதுவே நமக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது. எனவே, ஒரு பொருளை விரும்பு சாப்பிடுவதற்கு முன் அதனால் ஏற்படும் தீமைகளையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். தற்போது, வேர்க்கடலை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்.
வேர்க்கடலை தீமைகள்:
வேர்க்கடலையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய நிறைய சத்துகள் இருக்கின்றன. அதுவும், மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் என்ற கொழுப்பு அதிகமாகவே உள்ளது. எனவே, அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் எடை கூடிக்கொண்டே போகும். உடலில் எடை அதிகரித்துவிட்டாலே பின்னாளில் பல பிரச்சனைகளை சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு இயற்கையாகவே நட்ஸ் அலர்ஜி இருக்கும். அந்த மாதிரி அலர்ஜி இருப்பவர்கள் கொஞ்சமாக வேர்க்கடலை சாப்பிட்டாலும் வீக்கம், அரிப்பு, தொண்டை நமச்சல், வாயில் கூச்ச உணர்வு, வயிற்றுப் போக்கு, படை நோய் போன்ற எதிர்விளைவுகளை உண்டாக்கும். இன்னும் சிலருக்கு மூச்சு திணறல் மோசமாகி உயிருக்கே ஆபத்தாக மாறவும் வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருந்தால் வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால், வேர்க்கடலையில் ஆக்சலேட்டுகள் உள்ளதால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது சிறுநீரக கல் பிரச்சனையை இன்னும் மோசமாக்கலாம். சிறுநீரக கல் இல்லாதவர்களுக்கும் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இருப்பினும், வேர்க்கடலை அல்லது வேர்க்கடலையால் ஆன உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவது வாயு, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனையை உண்டாக்கிவிடும். குறிப்பாக நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த பிரச்சனை கண்டிப்பாக ஏற்படும்.