எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இன்று அதிகாலை சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதாவது, எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி துவக்கப்பள்ளி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படும் இப்பகுதியில், எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள்கள் காவல் நிலைய வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது.
இதனால், அதிர்ச்சியடைந்த காவல் நிலையத்தில் இருந்த போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உஷாராகி, அங்கு சென்று பார்த்தபோது அப்பொருள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த போலீசார், காவல் நிலையத்திற்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் சிலர் காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டிணை வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் அடைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, அண்மையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இது போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் எடப்பாடி காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.