போகி பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த போகிப் பண்டிகையானது ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படும் போகிப் பண்டிகையானது இந்திர கடவுளுக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஒரு புராணக்கதையும் உள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
போகிப் பண்டிகை வரலாறு
ஆடி மாதத்தில் விதைத்த நெற்பயிர்களை மார்கழியில் நல்லபடியாக அறுவடை செய்ய உதவியாக இருந்த இந்திர பகவானை மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இதை கண்ட தேவர்களின் தலைவனான இந்திரன் தான் மழை பொழிவதால் மட்டுமே பூமியில் விவசாயம் செழித்து வளர்வதாக கர்வம் கொண்டிருந்தார்.
இந்திரனின் ஆணவத்தை அடக்க கோகுல கிருஷ்ணன் இந்திர வழிபாட்டை தடை செய்து, கோவர்த்தன மலைக்கு வழிபாடு செய்ய மக்களை திசை திருப்பினார். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன் தொடர்ந்து ஒரு வாரம் விடாது பெருமழை பொழிய செய்து மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தினான். இதை பார்த்த கிருஷ்ணர் மக்களை காப்பாற்ற தனது ஒற்றை விரலால் கோவர்த்தன மலையை குடையாக உயர்த்திப் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார்.
கிருஷ்ணரின் செயலைக் கண்டு மெய்சிலிர்த்து போன இந்திரன் ஆணவத்தை துறந்தார். பின்னர், கிருஷ்ணரிடம் பணியவே கிருஷ்ணர் போகி பண்டிகை நாளில் இந்திரி விழாவாகக் கொண்டாட வரம் வழங்கினார். இதன் காரணமாகவே போகிப் பண்டிகையின் போது இந்திர வழிபாடு செய்யப்படுகிறது.