Mon. Jun 30th, 2025

அரசியல் அற்பத்தனம்.., ஆளுநர், ஆர்.என்.ரவி… – க.அரவிந்த்குமார்

TNGovernor

உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தபோது எதற்கு இந்த புதிய அரசியல் நாடகம் என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. அதுவும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கில், ஆளுநர் தலையில் உச்சநீதிமன்றம் நங்கென்று கொட்டிய பிறகும் கூட “தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைச்சாமி” என்று ஆளுநர், துணைவேந்தர்கள் மாநாட்டை அறிவித்தது அரசியலன்றி வேறென்ன.

எதற்காக தமிழக அரசுடன் போட்டிப்போட்டுக் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் சாசன விதிப்படி, ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கையெழுத்திட்டு அனுப்ப வேண்டியது தானே இவரது கடமை. அதைவிடுத்து அரசியல் கட்சிகளுக்கு இணையாக தானும் களமாட வேண்டிய காரணம் என்ன? பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் நிழல் அரசு நடத்த மத்திய அரசு அனுப்பும் வீணர்கள் தான் இந்த ஆளுநர்கள்.

அந்தவகையில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அறிவிக்கப்படாத பாஜக மாநில தலைவராக ஆர்.என்.ரவி எடுக்கும் செயல்பாடுகள் அனைத்துமே அரசியல் கோமாளித்தனங்கள் தான். அதிலும் இந்த துணைவேந்தர்கள் மாநாடு அற்பத்தின் உச்சம் எனலாம். பல்கலைக்கழங்களின் வேந்தராக இனி மாநில முதலமைச்சர் தான் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தர்கள் மாநாட்டை அறிவிப்பது இந்திய அரசியல் சாசனத்தை இவர்கள் “ஹெச்.ராஜா” அளவுக்குக் கூட மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

போதாக்குறைக்கு குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரும் இந்த மாநாட்டில் பங்கேற்க வருகை தருவது என்பது அவலம். விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட பொறுப்புகளுக்கு சென்றபிறகு அதற்குரிய வகையில் நடந்து கொள்வது தானே மரியாதை. ஆனாலும் ஆளுநர் நடத்தும் அரசியல் அடாவடிகளுக்கு குடியரசுத் துணைத்தலைவரும் துணைபோவது அந்த பதவிக்கு அழகல்ல.

42 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுத்து வெறும் 9 பேர் மட்டுமே மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஆளுநர், குடியரசுத்துணைத்தலைவர் ஆகியோர் அழைத்தும் 33 துணைவேந்தர்கள் பங்கேற்காதது எவ்வளவு பெரிய இழுக்கு.

ஆளுநரின் தனிப்பட்ட அரசியல் விருப்புகளுக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்பதா? வேண்டாமா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாய் சிக்கிக் கொண்டு தவிப்பது என்னவோ துணைவேந்தர்கள் தான். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை மட்டுமே ஒற்றை நோக்கமாக கொண்டதன் செயல்வடிவம் தான் இந்த துணைவேந்தர்கள் மாநாடு.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கருத்துகளையும் புறந்தள்ளி தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தமிழர் நலனுக்கு எதிரானவை. இந்த மாநாட்டால் நடக்கப்போவது ஏதுமில்லை. ஆளுநர் என்பவரே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.

– க.அரவிந்த்குமார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *