Mon. Jun 30th, 2025

அரசியல் பால்வாடி குழந்தைகளின் கவனத்திற்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்று முடிந்த கூட்டு நடவடிக்கைக் குழுவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபற்றி ஒருசிலர் மூடத்தனமான கேள்விகளை எழுப்புகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுப்பது பற்றியும், தமிழ்நாட்டில் குப்பைகளை கொட்டுவது பற்றியும் பினராயி விஜயனிடம் முதலமைச்சர் பேசினாரா? என்று ஒருதரப்பு கேள்வி எழுப்புகின்றனர். அதேபோன்று மேகேதாட்டு அணையை கட்டியேத் தீருவோம் என்று அடம்பிடித்து வருவது பற்றி கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் முதலமைச்சர் பேசினாரா? என்று மற்றொரு தரப்பினர் வினவுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் எதிர்வாதம் புரிவது எளிது. ஏடாகூடம் பேசுவது அதைவிட எளிது. உண்மையிலேயே தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசு திட்டமிட்டப்படி நடைபெற்றால், நாடாளுமன்றத்தில் நமக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அதனால் நமக்கான தேவைகளை மத்திய அரசிடம் பேசிபெறுவது என்பது கடினமாகி விடும். அந்தகோணத்தில் இந்த கூட்டு நடவடிக்கைக் கூட்டத்தை அணுக வேண்டுமே தவிர, துக்க வீட்டில் போய் தார்ப்பாய்க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது..

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோய்விடக் கூடாது என்பதற்காகத் தான் பிரதான எதிர்கட்சியான அதிமுக கூட, தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இதற்கு ஆதரவு தெரிவித்ததை மறந்துவிடக்கூடாது. வெறுமனே திமுகவுக்கு இதில் ஆதாயம் என்றால் அதிமுக தலையாட்டி விட்டு வந்திருக்குமா?.

சரி இன்னொரு உதாரணம் கூறுகிறேன்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சமீபத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்தார். அந்த சமயத்தில், சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி ஏராளமான இந்தியர்கள் கையில் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதுபற்றி ட்ரம்பிடம் மோடி ஏன் நேரில் பேசவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கான களம் என்பது வேறு. நோக்கம் என்பது வேறு.

அரசியலில் பால்வாடி குழந்தைகள் வேண்டுமானால், பினராயியிடம் இதைக் கேட்டிருக்கலாமே, சிவக்குமாரிடம் அதைக் கேட்டிருக்கலாமே என்று பிதற்றலாம். ஆனால், சத்தமில்லாமல் ஓடையாக ஓடும் ஆறுதான், ஓரிடத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியாக மாறுகிறது. எங்கு ஆறாக வேண்டும், எங்கு அருவியாக வேண்டும் என்பதற்கு இடம்பொருள் உண்டு. அது விமர்சகர்களை விட அரசியல்வாதிகளுக்கு ரொம்பவே நன்றாகத் தெரியும்.

எனவே வாயில் மண்ணைக் கொட்டினாலும் அசைபோடும் மடையர்கள், பிதற்றுவதை சற்று நிறுத்திக் கொள்வது நல்லது.

 

– க.அரவிந்த்குமார்

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *