தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகை இருக்கிறது. இந்த பண்டிகையானது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகவே பொங்கல் பண்டிகையை ‘தமிழர் திருநாளாம் தைப் பொங்கல்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அறுவடைத் திருவிழா:
உழவர்கள் மழை மற்றும் சூரியனின் உதவியால் ஆடி மாதத்தில் விதைத்த நெற்பயிர்களை மார்கழி மாதத்தில் அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வருவார்கள். அறுவடை நல்லபடியாக நடந்துமுடிய உதவி சூரியனுக்கும், தம்மோடு சேர்ந்த உழைத்த காளை மாடுகளுக்கும் நன்றி கூறும் விதமாக, அறுவடை செய்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்து புது பானையில் இனிப்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதன் காரணமாகவே பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருவிழா என்று அழைப்பதுண்டு. இந்த அறுவடைத் திருவிழா வட இந்தியாவில் மகர சங்கராந்தி என்றும், குஜராத்தில் உத்தராயணம் என்றும், மகாராஷ்டிராவில் குடி பட்வா என்றும், உ.பி.யில் கிச்சடி என்றும், கேரளாவில் ஓணம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
தைப்பொங்கல் எப்படி கொண்டாடப்படுகிறது?
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே வீட்டை சுத்தம் செய்து வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து விடுவார்கள். பொங்கலன்று, அதிகாலை எழுந்து வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு அதன் நடுவில் அடுப்பு பதித்தப்பார்கள். பின்னர், நல்ல நேரம் பார்த்து சூரியனை வணங்கி பொங்க வைக்க தொடங்குவார்கள். பொங்கல் பொங்கி வரும் வேலையில் குடும்பத்தினர் அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லி பொங்கலை இறக்கி, முதலில் சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடு செய்துவிட்டு, பின்னர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.