தமிழ்நாட்டில் எந்த ஒரு பெண்ணுக்கும் துன்பம் விளைவித்தலை ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை வரை விதிக்கும் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தது உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் பலாத்காரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம் மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், தமிழக எதிர்கட்சிகள் “யார் அந்த சார்?” என்று ஆளும் கட்சியை கேள்வி கேட்டு வறுத்து எடுத்தனர். இது, தமிழக அரசுக்கு பெரும் தலை வலியாக மாறியது.
இந்த நிலையில் தான், கடந்த மாதம் தமிழக சட்டமன்றத்தில் ‘டிஜிட்டல் முறை, மின்னணு முறையில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை இந்த சட்டத்தில் இணைத்து அற்கான தண்டனைகளை அளிக்கும் வகையில்’ இந்த சட்ட திருத்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் தான், இந்த புதிய சட்டம் கடந்த 25 ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததாக தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ளது.
இதன் படி, புதிய சட்டத்தில் “இந்த குற்றங்களுக்கு முதல் தண்டனையாக 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும்” விதிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, இந்த புதிய சட்டத்தின் படி, “இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும்” விதிக்கப்படுகிறது.
முக்கியமாக கல்வி நிலையங்கள், விடுதிகள், திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், புகார் அளிக்காமல் மறைத்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், புதிய சட்டத்தில் திருத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய சட்ட திருத்தமான, கடந்த 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.