பிரபல நடிகர் மிர்ச்சி செந்தில்லிடம் முகம் தெரியாத நபர் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல சின்னத்திரை நடிகரும் ஆர்.ஜே.வுமான மிர்ச்சி செந்தில், இது குறித்து வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், “கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வாட்ஸ்ஆப் மூலம் தனக்கு உதவி வேண்டும் என்று, ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக, செந்தில் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, வழக்கமாக குறுஞ்செய்தி அனுப்பாத நண்பர் நீண்ட நாட்களுக்குப் பிறகு குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்கிறாரோ என்றும், அவசரமாக பணம் வேண்டும் என அவர் கேட்டதாகவும் அந்த வீடியோவில் செந்தில் குறிப்பிட்டு உள்ளார்.
அதற்கு, “எவ்வளவு பணம் வேண்டும்?” என்று, செந்தில் கேட்க, “வங்கிக் கணக்கில் அனுப்ப வேண்டும்” என்று, எதிர் முனையில் உள்ளவர் கேட்டிருக்கிறார். அதனால், நீண்டகால நண்பர், பெரிய ஓட்டல் அதிபர் பண உதவி கேட்கிறார் என்பதை நம்பி, அவர் எண்ணில் இருந்து தான் குறுஞ்செய்தி வந்துள்ளது என்று நினைத்து ,15 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் கூறிய எண்ணிற்கு நம்பி G Pay மூலமாக அனுப்பி உள்ளார் செந்தில்.
பணம் அனுப்பும் போது தான், அதில் வேறு பெயர் குறிப்பிட்டதை பார்த்து மோசடியில் தாம் சிக்கியுள்ளோமோ? என சந்தேகத்தில் ஆய்வு செய்த போது தான், உண்மையிலேயே சைபர் கிரைம் மோசடி கும்பலின் வலையில் சிக்கி 15000 ரூபாய் பணத்தை இழந்ததாகவும் செந்தில் தெரிவித்து உள்ளார். Whatsapp குறுஞ்செய்தியால், தான் தற்போது 15 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்து விட்டேன் என்றும், அவர் வேதனையிலும் சிரிப்புடனும் பதிவை வெளியிட்டு உள்ளார்.
இவற்றுடன், அந்த மோசடி கும்பல் அனுப்பிய வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தியையும், அவர்களுக்கு அனுப்பிய G Pay தகவலையும் நடிகர் செந்தில் தற்போது பகிர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக, அந்த ஹோட்டல் உரிமையாளர் செந்திலை தொடர்பு கொண்டு பேசியதாகவும், தனது whatsapp நம்பரை யாரோ ஹேக் செய்து விட்டதாகவும், இது போல் 500 க்கும் மேற்பட்டோருக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பி பலரிடம் மோசடி செய்ய முயற்சிக்கப்பட்டதாக, அந்த ஓட்டல் அதிபர் தெரிவித்து உள்ளார். இது குறித்து கோயம்புத்தூரில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், கோயம்புத்தூர் ஓட்டல் அதிபர் செந்திலிடம் அவர் தெரிவித்து உள்ளார்.
இனிடையே, “வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி யாரேனும் பணம் கேட்டால், அதை நன்கு ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்டு உதவ வேண்டும்” என்றும், நடிகர் செந்தில் வீடியோ பேசி வெளியிட்டு உள்ளார்.