7 வயது சிறுமியை மூதாட்டி ஒருவர், கொடூரமாக தாக்கி சாலையில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
வீட்டுக்கு விளையாட சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம் நடந்தது எப்படி என்று பார்க்கலாம்..
நத்தம் புதுப்பட்டி சேர்ந்த பிரபு என்பவரின் 7 வயது மகள் பிரித்திகா, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி அருகில் உள்ள செல்வம் வீட்டிற்கு சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் அடிக்கடி விளையாடுவது வழக்கம். அப்படி, அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வீட்டில் உள்ள செல்வத்தின் தாய் 65 வயதான குருவம்மாள், “இங்கெல்லாம் வந்து நீ விளையாட கூடாது..” என்று, கண்டித்திருக்கிறார்.
ஆனால், எதுவும் அறியாத அந்த அப்பாவி சிறுமி, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மீண்டும் செல்வத்தின் வீட்டிற்கு விளையாட சென்று உள்ளார்.
அப்போது, கடும் ஆத்திரடைந்த அந்த மூதாட்டி, “உன்னைத் தான் இங்கு விளையாட வரக் கூடாது என்று சொல்லி இருக்கிறேனே.. அப்பறம் ஏன் மீண்டும் இங்கு வந்த.. இனிமேல் வருவியா..? வருவியா..?” என்று, சொல்லி சொல்லி ஏதுமறியாத அந்த பச்சிளம் குழந்தையை இரும்பு கம்பியால் கொலை வெறி தாக்குதல் நடத்து உள்ளார்.
கொடூரத்தின் உச்சமாக அந்த சிறுமியின் முகத்தில் கையால் குத்தியதில், அந்த சிறுமியின் முகம் வீங்கி போய், அந்த சிறுமி அங்கேயே மயக்கமடைந்து உள்ளார். படுகாயம் அடைந்த அந்த சிறுமியை, இறக்கமற்ற அந்த கொடூர மூதாட்டி, சாலையில் தூக்கி வீசி சென்றதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்து மயக்க நிலையில் கிடந்த சிறுமியை பார்த்தவர்கள், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், பதறியடித்து ஓடி வந்த பெற்றோர், அந்த சிறுமியை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ச்சியாக, உயர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர்.
அத்துடன், சிறுமியை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தான் மோதி சென்று விட்டனர் என்று, அவர்கள் நினைத்திருந்த வேளையில், 2 நாட்களுக்கு பிறகு கண் விழித்த சிறுமி, “என்னை தாக்கியது மூதாட்டி குருவம்மாள் தான்” என்று, தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சிறுமியின் தந்தை, இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் மூதாட்டி குருவம்மாளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணைக்குப் பின்பு நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அந்த தாய் கிழவியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, 7 வயது சிறுமியை மூதாட்டி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.