அரசு பள்ளி மாணவர்கள் கையில் துடைப்பத்ததை கொடுத்து பள்ளி வளாகம் மற்றும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆவாரங்குப்பம் என்ற ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன, இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பள்ளியில் உள்ள வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியையும், மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியையும் மாணவர்கள் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது.
மேலும், ஆபத்தான முறையில் மேல் நீர்த்தேக்க தொட்டியை மாணவர்கள் ஏறி சுத்தம் செய்யக்கூடிய காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தி இருந்தது.
படிக்க வரும் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், அங்கு பணியாற்றக்கூடிய தலைமை ஆசிரியர் உமாராணி என்பவரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.