தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன்பு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அந்த காவல் நிலைய போலீசருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் விசாரணை.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி காவல் நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி தினேஷ் என்ற இளைஞரை விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவரது சகோதரிகள் மேனகா மற்றும் கிருத்திகா எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த ஒன்பதாம் தேதி கிருத்திகா உயிரிழத்துள்ளார்.
இதில் காவல் ஆய்வாளர் சர்மிளாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், என்றும் எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்பு தட்டின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 9 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சர்மிளா, இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் வேறு காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் தலைமையில் அதிகாரிகள் இன்று சம்பவம் நடைபெற்ற நடுக்காவிரி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரி மேனகா மற்றும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள கிருத்திகாவின் உடல் ஆகியவற்றை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அறிக்கை விரைவில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.