காதலியை தகாத வார்த்தையால் திட்டிய அவரது தாயாரை காதலன் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை முகப்பேர் மேற்கு சர்ச் ரோடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 64 வயதான மைதிலி வசித்து வந்தார். கணவரை இழந்த மைதிலி, 24 வயதான தனது மகள் ரித்திகா உடன் தனியாக வசித்து வந்தார்.
அத்துடன், ரித்திகா அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் 25 வயதான ஷியாம் கண்ணன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளார். ஷியாம், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரியர் தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இந்நிலையில் தான், மைதலிக்கும் அவரது மகளுக்கும் இடையே அடிக்கடி வீட்டில் சண்டை வந்துக்கொண்டே இருந்து உள்ளது.
முக்கியமாக, ரித்திகா தினமும் வெளியே சென்று விட்டு, இரவு லேட்டாக வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததால், தாய் மைதலி அதனை தினமும் கண்டித்து வந்துள்ளார். இதனால், தாய் – மகள் இருவருக்கும் இடையே தினமும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ரித்திகா வீட்டிற்கு தாமதமாக வந்து உள்ளார். அப்போது, அவரது தாய் மைதிலி, தனது மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மகள் ரித்திகா தாயிடம் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்று உள்ளார்.
அதன் பிறகு, நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த தாய் மகளை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்று அலைந்து உள்ளார். ஆனால், இதற்கிடையே வீட்டில் இருந்து கோபித்து கொண்டு வெளியே சென்ற ரித்திகா, தனது காதலன் ஷியாம் கண்ணனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறிய நிலையில், ஷியாம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு வந்து, காதலி ரித்திகாவை சந்தித்து பேசிவிட்டு பிறகு அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கே அழைத்துச் சென்று விட்டுள்ளார்.
ரித்திகா வீடு திரும்பிய நிலையில், வழக்கம் போல் தாய் மைதிலி மகளை தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் இருவரையும் காதலன் ஷியாம் கண்ணன் சமாதானம் செய்ய முயன்றாகவும் கூறப்படுகிறது. ஆனால். ஒரு கட்டத்தில் மைதிலி, மகள் ரித்திகா மற்றும் ஷியாமை தகாத வார்த்தையால் திட்டியதால், கடும் ஆத்திரமடைந்த காதலன் ஷியாம் மைதிலியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது.
அப்போது, மைதிலி அப்படியே மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் ரித்திகா மற்றும் அவரது காதலன் ஷியாம் இருவரும், மைதிலியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு மைதிலியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். அதன் பிறகு, மருத்துவமனையில் இருந்தே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சென்னை ஜெ.ஜெ நகர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மைதிலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலியின் தாயாரை கழுத்து நெரித்து கொலை செய்த ஷியாம் கண்ணனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.