பொது மக்களிடம் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
அதாவது. கடந்த 2019 – ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி” என்று பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்ப பதிவு செய்யப்பட்டு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், “வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை” என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அத்துடன், “வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, சீமான் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி அதிரடியாக நிராகரித்து விட்டார்.
முக்கியமாக, “சீமான் தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துக்களை சீமான் பேசக் கூடாது” என்றும், சீமானுக்கு நீதிபதி அறிவுரை வழங்க சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறி வருகிறது.