பாகம்-2
டிரம்ப் – செலன்ஸ்கி உரையாடல்கள் குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்டை ஏகாதிபத்தியமாக, இன ஆதிக்கமாகத் தொடர்ந்த இரசியாவுக்கு அஞ்சி, எட்டியுள்ள இரசியப் பகை ஏகாதிபத்தியமான வட அமெரிக்காவின் நேட்டோ இராணுவக் கூட்டணியில் முன்னாள் கம்யூனிஸ்ட் ஆட்சி நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் பலவும் சேர்ந்தன!
அவை போலந்து (1999), செக்கியோ (1999), ஹங்கேரி (1999), லாட்வியா (2004), லிதுவேனியா (2004), எஸ்டோனியா (2004), பல்கேரியா (2004), ருமேனியா (2004), குரோஷியா (2009), அல்பேனியா (2009) ஆகிய நாடுகள் ஆகும்.
உக்ரைன் நாடும் 1991 லிருந்து இரசிய ஆக்கிரமிப்புக்கு அஞ்சி தற்காப்பு உணர்ச்சியுடன் வாழ்ந்து வந்தது. ஆனால், 2013-ல் உக்ரைன் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த விக்டர் யானுக்கோவிச் என்பவர், இரசிய மேலாதிக்கவாதத்திற்குத் துணை போகும் நபர் ஆனார். உக்ரைன் மக்கள் யானுக்கோவிச் ஒரு கருங்காலி என்றனர்.
உக்ரைன் மக்கள் புரட்சி செய்தனர். யானுகோவிச் இரசியாவுக்கு ஓடித் தப்பித்தார். இரசிய அதிபர் புத்தின் கையாள் யானுகோவிச் என்று ஏசப்பட்டார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போரை, இரசியப் பேரின விரிவாக்கவாதியான புத்தின் அரசு மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறது. புத்தின் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குச் சொல்லுகின்ற முதன்மைக் காரணம் செலன்ஸ்கி ஆட்சி. உக்ரைனை அமெரிக்க நேட்டோவுடன் இணைத்து இரசியாவை ஆக்கிரமிக்கப் போகிறது என்பது தான்!
இதனால், வட அமெரிக்க (US) ஆட்சி, உக்ரைனுக்குப் போர்க் கருவிகள் உதவி, நிதி உதவி கடந்த மூன்றாண்டுகளாகச் செய்து வந்தது. அதே போல் பிரான்சு, செர்மனி, கனடா, பிரிட்டன், இத்தாலி போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளும் உக்ரைனுக்குப் போர்க்கருவிகள், நிதி உதவிகளைக் கடந்த 3 ஆண்டுகளாகச் செய்து வருகின்றன.
ஆனால், இரசியப் படைகள் ஆக்கிரமிப்புப் போரில் முன்னேறி உக்ரைன் நகரங்கள், கிராமங்கள் என, அதன் மொத்தப் பரப்பில் சற்றொப்ப 20 விழுக்காட்டை ஆக்கிரமித்து, நிர்வாகம் நடத்தி வருகின்றன. அதன் ஆக்கிரமிப்பு வேகமாகத் தொடர்கிறது”என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் மிக கடுமையாக விமர்சித்து உள்ளது.
இந்த கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க அடுத்த கட்டுரையை வாசிக்கவும்..