பாகம்-3
டிரம்ப் – செலன்ஸ்கி உரையாடல்கள் குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெறியெடுத்த வேட்டை நாயாய் உலகெங்கும் தேசங்களைக் கவ்வி, கடித்துக் குதறி வந்த வட அமெரிக்கா, வியட்நாமில் பற்கள் உடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஈராக்கில் மாட்டிக் கொண்ட அவலத்தில், ஆப்கானிஸ்தானில் கால், கை உடைந்த நிலையில், இனி எந்த நாட்டுக்கும் தனது படையை அனுப்ப வேண்டாம்; தன்நாட்டு முதலாளிகள் உற்பத்தி செய்யும் போர்க் கருவிகளையும், தேவைப்படும் பணத்தையும் மட்டும் தனக்குச் சாதகமான ஒப்பந்த அடிப்படையில் அனுப்புவது என்று முடிவு செய்தது.
உக்ரைனில் இரசியாவை விரட்டி வெற்றியை ஈட்டிய பின் – படைக்கருவி, மற்றும் பண உதவிகளை நிறுத்திக் கொள்வோம் என்று வட அமெரிக்க வல்லாதி வல்லர்கள் சிந்தித்து வந்தார்கள். ஆனால், இரசியாவின் டொனால்டு ட்ரம்ப் – அவர்தான் புட்டின் – விடுவதாக இல்லை. உக்ரைனியர்களின் கடைசிச் சொட்டுக் குருதியையும் குடிக்காமல் என் தாகம் அடங்காது என்று கூறுவது போல், ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்தார்.
இந்த இக்கட்டான நிலையில், அமெரிக்க வணிகம், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் சீனாவிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. அப்போது தேர்தல் பரப்புரையில், இனி எங்கேயும் போர்க் கருவிகளை இலவசமாக அனுப்ப வேண்டாம்; நிதி உதவியும் செய்ய வேண்டாம். அப்போது தான் அமெரிக்காவின் உலகத் தலைமையையும் மண்ணின் மக்களையும் பாதுகாக்க முடியும் என்று வாக்குறுதிகள் கொடுத்தார். பைடன் தோற்று டிரம்ப் வென்றார்.
டிரம்ப் பதவிக்கு வந்தவுடன், முதலில் இரசியப் பங்காளியுடன் பகை இல்லாமல், உறவை வளர்த்துக் கொள்வோம்; இரண்டு பேரும் சமாதானமாக முடிந்தவரை உலக வேட்டையை நடத்திக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்து புத்தினுடன் கமுக்கப் பேச்சு நடத்திவந்தார் டிரம்ப்.
அதே வேளை உக்ரைனில் அவரவர் வசம் உள்ள பகுதிகள் அவரவர் நிர்வாகத்தில் இருக்கட்டும்; இரசியாவும், உக்ரைனும் போர் நிறுத்தம் செய்யட்டும் என்றார் டிரம்ப். புத்தினுக்குப் புளகாங்கிதம் தாங்க முடியவில்லை” என்று, தமிழ்த் தேசியப் பேரியக்கம் மிக கடுமையாக விமர்சித்து உள்ளது.
இந்த கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க அடுத்த கட்டுரையை வாசிக்கவும்..