Mon. Jun 30th, 2025

டிரம்ப் “முச்சந்தி முரடனா? டிரம்ப் – செலன்ஸ்கி உரையாடல் “காலனி ஆதிக்கக் கர்வம்! – (பாகம்-6)

                       பாகம்-6

“காலனி ஆதிக்கக் கர்வம் மற்றும் விடுதலை வேட்கை வீரம்” என்ற வகையிலேயே ‘டிரம்ப் – செலன்ஸ்கி’ உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கம் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய செலன்ஸ்கி, நேரே வெள்ளையர் நாட்டுத் தலைநகர் லண்டன் சென்றார்.

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயிர் ஸ்டாமர், எண் 10, டவுனிங் தெருவில் உள்ள தமது வீட்டிலிருந்து வாசலுக்கு வந்து செலன்ஸ்கியை எதிர்கொண்டு தழுவி வரவேற்றார். பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள் டிரம்ப்பின் அந்த அநாகரிக – எதேச்சாதிகார அணுகு முறையை ஏற்கவில்லை. உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவே சிந்திக்கிறார்கள்.

அதே வேளை டிரம்பை, வெளிப்படையாக எதிர்க்காமல், பாதுகாப்பான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை இரசியாவுடன் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

அதே வேளை, இரசியாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை ஐரோப்பியத் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். புத்தினைத் தலையில் தட்டி வரம்புக்குள் வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

செலன்ஸ்கியை வெள்ளை மாளிகை விருந்தினராக டிரம்ப் அழைத்தது, உக்ரைன் கனிம வளங்களை, வரம்பின்றி வட அமெரிக்கா அள்ளிக்கொள்ளும் ஒப்பந்தம் போடவே. ஆனால், அதற்குள் டிரம்பின் ஏதேச்சாதிகாரச் சீரழிவுப் பண்பாட்டால் செலன்ஸ்கியுடனான பேச்சு முறிந்துவிட்டது.

வெள்ளை மாளிகை ஓவல் அறையில் உட்கார்ந்துகொண்டு டிரம்ப் “முச்சந்தி முரடன்” போல் பேசியதை இரசியாவின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பாராட்டிப் புகழ்ந்து தள்ளி உள்ளார். அமெரிக்கத் தலைவர் டிரம்ப், உக்ரைனில் போரை விரும்பவில்லை; ஆனால், ஐரோப்பிய நாடுகள் போரைத் திணிக்கின்றன என்று, லாவ்ரோவ் சாடியுள்ளார்.

இரசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள நல்லுறவை முன் மாதிரியாகக் கொண்டு, இரசியாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவை உருவாக்க வேண்டும் என்று பொங்கி வழிந்து உள்ளார்.

தமிழ்த் தேசியர்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். வட அமெரிக்கா, இரசியா, சீனா போன்ற நாடுகள் வகுத்துக்கொள்ளும் கூட்டணிகள் நமக்கு வழிகாட்ட முடியாது. பழைய கம்யூனிஸ்ட்டு இரசியாவும், கம்யூனிஸ்ட்டு சீனாவும் தங்கள் தங்கள் நாட்டின் நலனுக்காக இந்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு முற்போக்கு சனநாயகவாதிகள் பட்டமோ அல்லது தரகு முதலாளி பட்டமோ கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில், நேரு அரசுடன் சகோதரத்துவம் பேசும் சீனா, அடுத்த கட்டத்தில் உலகமகா எதிரி இந்தியா என்று படம் காட்டும்.

அதே போல், அன்றையத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி சனநாயக உரிமைகளைப் பறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்து, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை இரத்துச் செய்து, 1975 – 76 ல் சர்வாதிகாரப் பேயாட்டம் ஆடினார். அவற்றை இடதுசாரி சனநாயக முற்போக்குச் செயல்பாடுகள் என்று ஆதரித்தது அன்றைய சோவியத் நாட்டின் (இரசியாவின்) கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அதன் ஆட்சியும். தனக்கு ஒரு நட்பு நாடு தேவை. அந்த நாடு தன் மக்களை எவ்வளவு அழித்தாலும் கவலை இல்லை என்பது தான், அன்றைய இரசியக் கம்யூனிஸ்ட்டு ஆட்சி – சீனக் கம்யூனிஸ்ட்டு ஆட்சிகளின் “சனநாயக சோசலிசப் புரட்சி” போர்த் தந்திரம்!

அதற்குத் தமிழர்கள் பலியாகக் கூடாது. இனி மேலும், எது சரி, எது தவறு, எது நமது தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க, முன்நகர்த்த உதவும் என்று பார்த்து தான் நாம் நமது உள்நாட்டுக் கொள்கையையும், வெளிநாட்டு விமர்சனங்களையும் முன் வைக்க வேண்டும்” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், வலியுறுத்தி உள்ளார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *