மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி, மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் தான் மகாவிஷ்ணு துயிலில் இருந்து விழித்தெழுவார். ஆகவேதான் மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை வணங்குகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், பெருமாளுக்கே உரிய ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, மாதத்தில் 2 ஏகாதசி என வருடத்திற்கு 24 ஏகாதசி விரதம் வருகின்றன. இருப்பினும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி தான் மிகவும் சிறப்பு வாய்ந்த “வைகுண்ட ஏகாதசி” ஆகும். இது “மோட்ச ஏகாதசி” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. பொதுவாக, ஒரு பண்டிகை என்றால் அதற்கு பின்னால் அசுர வதத்தை முன்னிலைப்படுத்தி ஒரு புராண கதை இருக்கும். அதுபோல, வைகுண்ட ஏகாதசி பண்டிகையும் அப்படி ஒரு அசுரணை வதம் செய்த நாளாகத்தான் உள்ளது.
வைகுண்ட ஏகாதசி வரலாறு!
கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்க, மகாவிஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார்.
முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று நினைத்தார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.
அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்’ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், ‘ஹூம்’ என்று ஒரு ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.
அதே நேரத்தில் எதுவும் தெரியாதவர் போல் கண்விழித்த மகாவிஷ்ணு, தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ”ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்” என்று வரம் அளித்தார். இதன் காரணமாக தான் வைகுண்ட ஏகாதசி சொர்க்க பதவியை கிட்டும் சிறப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.