“கோவில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்” என்று, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உயள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடத்த ஆதி திராவிட சமுதாய மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி, பெரியசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, “விழா அழைப்பிதழ்களிலும் சாதிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக” தெரிவிக்கப்பட்டது. இதற்கு அறநிலைய துறை தரப்பில், “விழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயரை தவிர்க்க வேண்டும்” என்று, சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, “கோவில்களில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்” என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
“அதன்படி பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொது மக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல், விழா நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், சாதிப் பெயருடன் விழா நடத்த அனுமதிக்கக் கூடாது” எனவும் அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார். இச்சம்பவம், ஊர் மக்களிடம் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.