தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாள் அதாவது மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படுவதே போகிப் பண்டிகை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமே’ என்ற சாராம்சத்தை அடிப்படையாக கொண்ட போகிப் பண்டிகை நாளில் வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.
அன்றைய தினத்தில் பழைய பொருட்களை மட்டுமல்லாமல், மனதில் உள்ள பழைய கவலைகளையும், கெட்ட எண்ணங்களையும் அக்னி குண்டத்தில் போட்டு பொசுக்கி விட வேண்டும் என்பதே இதில் மறைந்துள்ள தத்துவமாகும்.
போகிப் பண்டிகை
இந்த போகிப் பண்டிகையை சில இடங்களில் போகிப் பொங்கல் என்றும் சொல்வார்கள். இப்பண்டிகையை நம் முன்னோர்கள் “போக்கி” என்று அழைத்தனர். பின்னர், நாளடைவில் அந்த சொல்லே “போகி” என்று மாறிவிட்டது. போகி தினத்தில் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வாசலுக்கு சாணம் தெளித்து வண்ண நிறங்களால் கோலமிட்டு வீடே புதுப்பொலிவுடன் அழகாக இருக்கும்.
பின்னர், அன்றைய தினத்தில் நல்ல நேரம் பார்த்து வீட்டின் முன் மற்றும் பின் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ ஆகிய மூன்றையும் சேர்த்து காப்பு கட்டிவிடுவார்கள். மழைக்காலம் முடிந்து குளிர் உச்சமாகும் காலம் என்பதால், அதிகம் நோய்க்கிருமிகள் பரவும். இதை தடுக்க நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வழக்கமே இந்த காப்புக் கட்டு.