“நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா?” என்ற கேள்விக்கு, காளியம்மாள் மலுப்பலான பதில் அளித்துள்ளது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
நாம் தமிழர் கட்சியில் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பொறுப்பு வகித்து வருகிறார். என்றாலும், கடந்த சில மாதங்களாகவே, நாம் தமிழர் கட்சியில் இருந்து பலரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். கட்சியில் சரியான மரியாதை இல்லை என்றும், கொள்கையில் சீமான் சரியாக இல்லை என்றும், கட்சியை விட்டு வெளியேறிய பலரும் குற்றச்சாட்டுக்களை அடுக்க வந்தனர்.
நேற்று கூட அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் முருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.
கூடவே, நாம் தமிழர் கட்சியில் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராகவும் காளியம்மாள் அறியப்பட்டு வந்தார். அவரது மேடை பேச்சு பல்வேறு அரசியல் கட்சியினரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், அப்படிப்பட்ட காளியம்மாளை பற்றியே, சீமான் தவறாக பேசியதாக ஆடியோ ஒன்றும் கடந்த சில மாதங்களுகு்கு முன்பு வெளியாகி, வைரலானது. அது முதல், நாம் தமிழர் கட்சியில் காளியம்மாள், தனது செயல்பாட்டுக்களை தொடர்ச்சியாக குறைத்துக்கொண்டு வந்தார்.
அதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சியில் பலரும் வெளியேறும் கட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், காளியம்மாளும் அக்கட்சியில் இருந்து வெளியேறி விட்டதாக சில வாரங்களுகு்கு முன்பு கூட இணையத்தில் ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான், திமுக அழைப்பிதழ் ஒன்றில் காளியம்மாளின் பெயர் இடம் பிடித்து உள்ளது. அதில், நாதக பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்று பெயர் குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என்றே அவர் பெயருக்கு பின்னால் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து தொலைக்காட்சி ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக பேசிய கேட்டதற்கு காளியம்மாள், “நாதக-வில் இருக்கிறேனா? இல்லையா? என்பதை நான் விரைவில் சொல்கிறேன்” என்று, பேசி உள்ளார்.
ஆனால், செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப “நாதக பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல் குறித்து வெளிப்படையாகவே பேசுங்கள்” என்று, கேட்டதற்கு, “எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். அதனால், விரைவில் சொல்கிறேன்” என்றும், காளியம்மாள் பதில் அளித்து உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, “நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகிவிட்டாரா?” என்று செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதில் அளித்து பேசிய அக்கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான், “அது தெரியல” என்று, பதில் அளித்தார்.
மேலும், “பருவக் காலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று இருக்கும். அது மாதிரி எங்க கட்சிக்கு இது களையுதிர் காலம்” என்றும், சீமான் நக்கலாக பேசி சிரித்தார்.
குறிப்பாக, “நாதக-வில் இருப்பதா? கட்சியை விட்டு விலகி வேறிடத்தில் இயங்குவதா என? முடிவெடுக்கும் உரிமை காளியம்மாளுக்கு உள்ளது என்றும், அவர் வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் செல்லலாம்” என்றும், காளியம்மாள் குறித்த கேள்விக்கு மதுரை விமான நிலையத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.